உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரை, எதிர்வரும் வாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அப்போதைய சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரை ஓகஸ்ட் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்போதைய இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை எதிர்வரும் 18ஆம் திகதி, குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் குறித்த முன்னறிவிப்பு புலனாய்வுத் தகவல்களை முதலில் பெற்ற அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, இன்று எட்டாவது நாளாக, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். இதன்போது ஊடகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை